மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜோ்மனி மற்றும் பெல்ஜியத்தில் பெய்துவரும் கடும் மழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரை குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜோ்மனியில் அதிகளவாக 59 பேர் உயிரிழந்துள்ளனர். பொல்ஜியத்தில் குறைந்தது 11 மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளன.
அத்துடன், இரு நாடுகளிலும் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கடும் இயற்கை அனர்த்தங்களால் சுமார் 2 இலட்சம் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
ஜேர்மனி - ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு வீடுகள் உள்ளிட்ட பெருமளவு கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அண்டை நாடான பெல்ஜியத்தில் 11 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள லீஜ் நகரத்திலிருந்து குடியிருப்போரை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இதேவேளை, மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெதர்லாந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து தெற்கு மாகாணமான லிம்பர்க்கில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில் ஜனாதிபதி ஜோ பைடனுடனான சந்திப்புக்காக அமெரிக்கா சென்றுள்ள ஜோ்மன் ஆட்சித் தலைவர் ஏங்கலா மெர்கல், இயற்கைப் பேரழிவால் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்க இராணுவம், பொலிஸ் மற்றும் மீட்புக் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்கு உதவ ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.
ஜோ்மனியில் வெள்ளம் பெருகெடுத்தோடும் பகுதிகளில் இன்னமும் பலர் வீட்டுக் கூரைகளில் மீது ஏறி உதவிக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஜேர்மனி வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா பகுதியில் புதன்கிழமையன்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் இறந்தனர்.
ஜெர்மனி போலவே பெல்ஜியத்திலும் நிலைமை மோசமாக உள்ளது. பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்பிற்குப் பிறகு பெல்ஜியத்தின் மூன்றாவது பெரிய நகர்ப்புறப் பகுதியான லீஜினில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அந்நகர மேயர் வலியுறுத்தியுள்ளார்.
வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்கள் தங்கள் கட்டிடங்களின் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெல்ஜிய நகரமான பெபின்ஸ்டரில் 10 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மோசமான வானிலை காரணமாக பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.